
அனுப்புனர்:
ஒரு தமிழ்க்குடிமகன்
உயர்திரு: ஈவிகேஎஸ்.இளங்கோவன் அவர்கள்
தமிழக காங்கிரஸ் கமிட்டி
சத்யமூர்த்தி பவன்
சென்னை-02
பொருள்: தங்களின் செயல்பாடுகளைப் பாராட்டிக் கடிதம்
ஐயா,
பகுத்தறிவு இழந்து அடிமைப்பட்டுக் கிடந்த திராவிட இனத்தை மீட்டெடுத்து தன்மான நீர்பாய்ச்சிய தனிப்பெரும் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் ஒன்றுவிட்ட பேரனாகிய உயர்திரு அண்ணன் ஈவிகேஎஸ்.இளங்கோவன் அவர்களுக்கு, தமிழக,தமிழர்கள் நலனில் கொஞ்சமாவது அக்கறை கொண்ட ஒரு வழிப்போக்கனின் கடிதம்.
திராவிடத் தந்தை அய்யா பெரியார் அவர்கள் சாதரண அறிவிற்கும், பகுத்தறிவிற்கும் உள்ள வித்தியாசத்தை மக்களுக்கு மிக எளிமையாக எடுத்துரைத்து வழிநடத்தினார்.அதாவது நெருப்பு சுடும் என்பதும்,சாலையின் குறுக்கே நின்றால் வாகனத்தில் அடிபடுவோம் என்பதும் ஆடு,மாடுகளுக்குக் கூடத் தெரியும்.அது அறிவு. ஆனால் அதையும் தாண்டி எது நல்லது? எது கெட்டது?,எதை பேச வேண்டும்? எதை பேசக்கூடாது? என்பதைப் பகுத்து அறிவது தான் பகுத்தறிவு.
கடந்த 27ம் தேதி ஒரு திருமண விழாவில் கலந்து கொண்ட தாங்கள் பேசும் போதும், முல்லைப் பெரியாறு விவகாரத்தில் மத்திய அமைச்சர் ஒருவரை எதிர்த்து திமுக சார்பில் மதுரையில் நடக்க இருந்த கண்டனக்கூட்டத்திற்கு போட்டியாக நம்மாலும் கூட்டம் நடத்த இயலாதா? ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு பிரச்சினையை மையமாகக் கொண்டு நாமும் கண்டனக்கூட்டம் நடத்துவோம் எனவும் பேசியிருந்தீர்கள்.
இந்த இடத்திலே நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ளத் தவறிவிட்டீர்கள்.அதாவது முல்லைப்பெரியாறு பிரச்சினை என்பது ஏதோ திமுகவின் சொந்தப் பிரச்சினையோ அல்லது தலைவர் கலைஞர் அவர்களின் வீட்டுப்பிரச்சினையோ அல்ல, அதன் குறுக்கே தடுப்பணை கட்டினால் தலைவர் வீட்டுக்கு தண்ணீர் கிடைக்காது,அதனால் தான் இந்த கூட்டம் நடத்தப்படுகிறது என்பது போல நினைத்துக் கொண்டு பேசியுள்ள நீங்கள் இருப்பது தமிழகத்திலா அல்லது கேரளத்திலா? என்ற சந்தேகம் எழுகிறது எனக்கு.
முல்லைப்பெரியாறு விவகாரத்தில் தமிழகத்திற்கு தொடர்ந்து துரோகமிழைக்கும் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷை எதிர்த்து வரும் 10ம் தேதி தலைவர் கலைஞரால் ஏற்பாடு செய்யப்பட்டு தற்சமயம் ஒத்தி வைக்கப்பட்டுள்ள கண்டனக் கூட்டம் ஒட்டுமொத்த தமிழகத்திற்காக, தமிழக மக்களுக்காக என்பதை மறந்து நீங்கள் அதற்குப் போட்டியாக அலைவரிசை பிரச்சினையை கிளப்புகிறீர்கள். ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கியதில் எந்தவிதமான முறைகேடும் நடைபெறவில்லை என பிரதமரே அறிவித்த பிறகும் கூட அதை ஒத்துக்கொள்ள உங்களுக்கு மனது வரவில்லையா? அல்லது உங்கள் தலைவியை மற்றும் இளைய தலைவரை குஷிப்படுத்த வேண்டும் என்ற நோக்கமா?
நமது தொப்புள் கொடி உறவுகள் சிதைக்கப்பட்டு அவர்களின் உறுப்புக்கள் துண்டுதுண்டாய் வெட்டப்பட்டு குழந்தைகள்,முதியவர்கள்,பெண்கள் என்ற வேறுபாடின்றி துடிக்கத் துடிக்க கொத்துக்கொத்தாய் கொடியவர்களால் கொலை செய்யப்பட்டப் போதும், அதை எதிர்த்து இங்கே ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய போதும், அங்கே கொல்லப்படுவர்கள் பொதுமக்களே அல்ல (மக்களே அல்ல), அவர்கள் எல்லாம் புலிகள் என வாய்க்கூசாமல் சொன்ன "சட்டைக்கிழிக்கும் பவனின்" தலைவர்கள் அனைவருக்கும் சிந்திக்கும் திறன் இவ்வளவு தானா? இலங்கையில் நடைபெறும் பிரச்சினை (நாதியற்ற)தமிழர்களின் பிரச்சினை. அதைப் பற்றி நமக்கு கவலையில்லை என அனைத்து செய்திகளையும் மத்திய அரசிடம் சேரவிடாமல் முடக்கியும், தமிழக தலைவர்களின் நடவடிக்கைகளை இலங்கை அரசுக்குப் போட்டுக் கொடுத்தும் ஈனச்செயல்கள் புரிந்த, இந்தியாவில் உயர்பதவி வகிக்கும் மலையாளிகளுக்கு ஒரு பிரச்சினை என்றதும் வேஷ்டியை மடித்துக் கட்டிக்கொண்டு களமிறங்கும் மத்திய அமைச்சரையும் அதற்கு சிங்..,சாங்..,சைங் போடும் தமிழக காங்கிரஸ் கோஷ்டி சாரி கமிட்டி தலைவராகிய உங்களையும் எங்கு வைத்து அழகு பார்ப்பதோ என்று தெரியவில்லை.
தினசரி தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்பட்ட போதும்,அப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை எனச்சொல்லும் அமைச்சரும் உங்கள் கட்சியினராக இருப்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விசயம். ஆக தமிழக நலன் தமிழர்களின் நலன் எப்படி போனாலும் பரவாயில்லை, நமது தலைமைதான் முக்கியம் எனக் கருதும் நீங்கள் அடுத்த முறை தயவுசெய்து தமிழனிடம் ஓட்டுக்கேட்டு வராதீர்கள். கேரளாவில் தான் காங்கிரஸ் இருக்கிறதே அங்கே சென்று ஏதாவது ஒரு தொகுதியில் சீட்டு வாங்கி நின்று வெற்றிபெற முயற்சி செய்யுங்கள். முல்லைப் பெரியாறு விசயத்தில் நாங்கள் உங்கள் பக்கம் நின்றோம் என நீங்கள் அவர்களிடம் கூறினாலும் அவர்கள் உங்களுக்கு வேட்டுத்தான் வைப்பார்களேயன்றி ஓட்டுப்போட மாட்டார்கள். ஏனென்றால் இளிச்சவாயனாக இருப்பதற்கு அவர்கள் தமிழர்கள் அல்லவே!
அப்பறம் உங்கள் கோஷ்டி எப்படி போய்க்கொண்டிருக்கிறது? உங்கள் கோஷ்டிக்கென ஆட்கள் சேர்க்கும் பணி நல்லமுறையில் நடைபெறுகிறதா? சாஸ்திரி பவனில் அடுத்த சண்டை எப்போது நடைபெறும் என்ற விவரங்களை அறிய ஆவலுடன் முடிந்தால் உங்கள் பதிலையும் எதிர்பார்க்கும் ஒரு தமிழ்க்குடிமகன்.
நன்றி.


/பெறுனர்: உயர்திரு: /
இந்த அடைமொழியை எதிர்க்கிறேன். இது தவிர ஒவ்வொரு வார்த்தையையும் வழி மொழிகிறேன். பாமரனின் மனக்குமுறலை வெளிப்படுத்தும் இடுகை. பாராட்டுக்கள்.
வானம்பாடிகள் பாலா சார் சொல்வதை நானும் வழிமொழிகிறேன்..
/*
ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கியதில் எந்தவிதமான முறைகேடும் நடைபெறவில்லை என பிரதமரே அறிவித்த பிறகும் கூட அதை ஒத்துக்கொள்ள உங்களுக்கு மனது வரவில்லையா?
*/
என்ன கொடுமை சார் இது! பிரதமர் சொல்லிட்டாரு, ஆனா பாருங்க சி-பி-இ-க்கயு தெரியல... அது பாட்டுக்கும் கேஷ் போடுது!
--
இப்போ ஊர்வலமே கன்சல் ஆகிடுச்சே! அப்போ நம்ம தலைவர் ரொம்ப சுத்தமானவரோ?
தங்களின் இந்த கடிதம் இளங்கோவன் போன்றவர்களுக்கு
ஒரு சாட்டை அடியாக இருக்கும். இனியாவது என்ன பேசுகிறோம்
என்பதை சிந்தித்து பேசுவார்கள்.
அபுல்.
எங்க வைச்சு அழகு பார்க்கலாம்?
அவங்கதான் மிரட்டுனாங்கன்னா, இவங்க ஏன் போராட்டத்தைக் கைவிட்டாங்க?
மடியில் கனமிருந்தாத்தான் வழியில் பயமிருக்கும்!!
@வானம்பாடிகள்
@தீப்பெட்டி
@வடக்குப்பட்டி ராமசாமி
@abulbazar
@ஹுஸைனம்மா
என அனைத்து நல்ல உள்ளங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! தொடர்ந்து இணைந்திருங்கள்
தமிழ்மணம்,தமிழிஷ்,தமிழ்10 ல் வாக்களித்த அனைத்து நல்ல உள்ளங்களுகும் நன்றி! தொடர்ந்து ஆதரவளிக்க அன்போடு வேண்டுகிறேன்.