கடல் நீர் நடுவே பயணம் போனால் குடி நீர் தருபவர் யாரோ?
தனியாய் வந்தோர் துணிவைத் தவிர துணையாய் வருவோர் யாரோ?
ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார்,ஒவ்வொரு நாளும் துயரம்.
ஒரு ஜான் வயிறை வளர்ப்பவர் உயிரை ஊரார் நினைப்பது சுலபம்.

கடலில் நீரில் தங்கள் உயிரை பணயம் வைத்து தொழில் செய்யும் உலக மீனவர்களுக்கு ஒரே பயம் கடல் மட்டுமே! எப்போது கடல் கொந்தளிக்குமோ? எப்போது கடல் காற்று மாற்றி வீசுமோ? திசை தெரியாமல் மாறிப்போய்விடுவோமோ? புயல் ஏதாவது வந்துவிடுமோ? என அனைத்துமே கடலும் கடலைச் சார்ந்த நிலமுமாக உலகம் முமுவதும் வாழும் நெய்தல் நில மக்களின் சோகம்.

இத்தனை காலமும் கொஞ்சம் கொஞ்சமாக மீனவர்களைச் சீண்டிவந்த இலங்கை கடற்படையினர் கடந்த 2 மாத காலங்களாக அவர்களின் அராஜகங்களை மிகக் கடுமையாக கட்டவிழ்த்து விட ஆரம்பித்துவிட்டனர். இராமேஸ்வரம் தொடங்கி நாகப்பட்டினம் வரை அவர்களிடம் அடிவாங்காத மீனவர்களே இப்போது இல்லையெனலாம். முன்பெல்லாம் சாதாரணமாக மிரட்டி திட்டி அடித்து அனுப்பும் இலங்கையின் காவலர்கள் இப்போது மிகத்தைரியமாக அந்த மீனவர்களை அடித்து உதைத்து, நிர்வாணப்படுத்தி அவர்களின் மீன்களை கடலிலே கொட்டிவிட்டு, வலைகளை அறுத்து அவர்களின் படகுகளை சேதப்படுத்தி, அவர்களின் உணவுகளை சூறையாடி, மீனவர்கள் வைத்திருக்கும் பணம் மற்றும் மொபைல் போன்கள் ஆகியவற்றையும் எடுத்துக் கொண்டு, “போய் சொல்லுடா இந்தியாவிடம்” என தங்களின் திமிர்தனத்தை தொடர ஆரம்பித்து விட்டனர்.

கேட்பதற்கு நாதியற்ற அந்த படிப்பறிவற்ற ஜீவன்கள் மிஞ்சி மிஞ்சிப் போனால் அந்த மாவட்ட ஆட்சித்தலைவரிடம் முறையிட்டு விட்டு வழக்கம் போல தங்கள் பணிகளை தொடர ஆரம்பித்து விடுவார்கள். ஆட்சியரும் கடமைக்கு அரசுக்கு ஒரு தகவலைக் கொடுத்துவிட்டு கண்களை மூடிக்கொள்வார். தமிழக அரசு மத்திய அரசிடம் முறையிடும். எத்தனை முறை முறையிடப்பட்டது, எத்தனை முறை கடையடைப்பு செய்யப்பட்டது? கொஞ்சம் கூட பிரயோசனம் இல்லை. மத்தியிலே ஆளும் காங்கிரஸ் அரசுக்கு காதுகளே இல்லையா? என கேட்கும் அளவிற்கு இலங்கைத் தமிழர் பிரச்சனை முதல் தமிழக மீனவர்கள் பிரச்சனை வரை எதையுமே கண்டுகொள்ளாமல் கள்ள மவுனம் சாதிக்கிறது. காரணம் என்ன? இலங்கயை நினைத்து பயப்படுகிறதா? பிரம்மாண்ட தீவிரவாத நாடான பாகிஸ்தானை சமாளிக்கும் போது, இந்தியாவை விட மனித வளம் நிறைந்த சீனாவை சமாளிக்கும் போது, சாதாரண ஒரு குட்டித்தீவான இலங்கையைச் சமாளிப்பதற்கு இந்தியாவால் முடியாதா?

சில நாட்களுக்கு முன்பு அடிவாங்கி விட்டுத் திரும்பிய மீனவர்களிடம் யார் அடித்தது? என விசாரித்தால், அடித்தது இந்தியக் கடற்படை என சொன்னார்கள். ஆக இலங்கை கடற்படை செய்யும் வேலையை இப்போது நமது கடற்படையே செய்ய ஆரம்பித்து விட்டது. எந்நேரமும் தன் எல்லை ரோந்திலே கவணம் செலுத்துகிறது இலங்கை கடற்படை. ஆனால் ஒரு அவசரத்திற்கு உதவி தேவைப்பட்டால் அழைப்பதற்கு கூட இந்தியக் கடற்படை எந்த நேரத்திலும் இருப்பதேயில்லை. ஒரு வேளை இந்தியக் கடற்படை ரோந்து கப்பல்கள் எல்லாம் நீர் மூழ்கியாக இருக்குமோ? இந்த நிலையில் இலங்கையுடன் சேர்ந்து கூட்டுரோந்து மற்றும் கூட்டு பயிற்சியில் ஈடுபடப் போவதாக இந்தியக் கடற்படை அறிவித்ததுள்ளது.கூட்டு ரோந்து செயல்படுத்தப் பட்டால் இரண்டு படையினரும் தங்கள் பணிகளை பகிர்ந்து கொள்வார்கள்.அதாவது இலங்கை கடற்படை மீனவர்களை நிர்வாணப்படுத்தினால், இந்தியக் கடற்படை அவர்களின் பொருட்களை சேதப்படுத்துவார்களோ என்ற அச்சம் நமக்கு ஏற்படுவது இயற்கையே!
ஆக மீன்வலைகளை மட்டுமே ஏந்தும் எங்களின் மீனவர்களின் கைகளில் ஆயுதம் ஏந்தும் நிலையை ஏற்படுத்தி விடுவார்களோ என நினைக்கத் தான் தோன்றுகிறது.


அடிக்கவே இல்லன்னு சொல்ல ஒரு முந்திரி இருக்கிறப்ப எடுபட்ட நாய்க்கு எளக்காரம்தான். ஏண்ணே பண்ண மாட்டான்.
அடுத்த உலகத் தமிழர் தலைவன் தமிழக மீனவர்களுக்குள் இருந்துதான் உருவாகுவான்....
@வானம்பாடிகள்
@வேல் தர்மா
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. தொடர்ந்து இணைந்திருங்கள்