டிய்ங்...,டிய்ங்...,டிய்ங்...,
"பயணிகளின் கனிவான கவனத்திற்கு, வண்டி எண் 2..5...0..5... சென்னைஎழும்பூரில் இருந்து திருச்சி செல்லும் பல்லவன் எக்ஸ்பிரஸ், இன்னும் சிலநிமிடங்களில் நாலாவது பிளாட்பாரத்தை வந்தடையும்"
"யுவர் அட்டேன்சன் பிலீஸ்..."
"டேய் இதச் சொல்லி சொல்லியே இன்னிக்கு பூரா ஓட்டிடுவானுங்க போலிருக்கே" அன்பு அலுப்பாகச் சொன்னான்.
" நான் அப்பவே சொன்னேன் வாடா சாப்டுட்டு வரலானும்னு, நீ தான் வண்டி போயிரும்னு சொல்லி அவசரப்பட்டே, அனுபவி" நொந்தபடி வந்தது அருளிடமிருந்து பதில்.
"அதெல்லாம் ஓக்கேதான்! கூட்டம் எப்டியிருக்கு பாத்தியா? நாளைக்கு தீபாவளி. இங்கயும் கோயம்பேட்லயும் இருக்குற கூட்டத்த பார்த்த முக்கால்வாசி மெட்ராஸூ காலியாயிடும் போலிருக்கே"
“நான் தான் சொன்னேன்ல, இந்த டிரைனை எப்பவுமே நம்ப முடியாது, பேசாம பஸ்ல போயிடலாமுன்னு. ஆனா நீ தான் கேக்காம டிக்கெட்ட புக்பண்ணி இப்ப பிளாட்பாரத்துல கொண்டு வந்து உக்கார வச்சிட்டே!"

"கண்ணா! ஒவ்வொன்னுக்கும் ஃபைனல் டச் இருக்கும்ல. அதுமாதிரி தான்டா நம்ம பயணத்துக்கும் ஒரு ஃபைனல் டச் இருந்தாத்தான் நல்லா இருக்கும். அதுக்காகத்தான் பஸ்ல போகாம, டிரைன்ல டிக்கெட் போடச்சொன்னேன், சரி.., நீ இங்கயே இரு, நான் போயி ஏதாவது ஸ்வீட் வாங்கிக்கிட்டு வர்றேன்", சொன்ன அன்பு தன்னிடமிருந்த பையை அவனிடம் கொடுத்துவிட்டு ரெஸ்டோரன்ட் நோக்கிச் சென்றான்.
சாதாரணமாகவே மாநாட்டுத்திடல் போல காட்சியளிக்கும் சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் தீபாவளி நேரமாதலால் பிதுங்கி வழிந்தது. அனைவரும் அதிகமாக திருச்சி நோக்கிச்செல்லும் அந்த பல்லவனுக்காக வழிமேல் விழிவைத்துக் காத்திருந்தார்கள். ஒரு பக்கம் தன் அபிமான கதாநாயகனிடன் ஆட்டோகிராப் வாங்க முண்டியடிக்கும் கூட்டம் போல அந்தப் பக்கமாக வந்துகொண்டிருந்த டிடிஆர்களை மொய்க்க ஆரம்பித்தனர். ஊருக்கு போகும் அனைவரும் தங்கள் எடையை விட அதிகமாகவே லக்கேஜ் பைகளை வைத்திருந்தார்கள். அன்பு சுவீட் வாங்கப் போய் விட்டதால் அந்தப் பக்கத்தில் கிடந்த ஒரு பெஞ்சில் தன்னை சாய்த்துக் கொண்டான் அருள். இன்னமும் அதே அறிவிப்பு தொடர்ந்து கொண்டிருந்தது. மதியம் எதுவுமே சாப்பிடாததால் லேசாக மயக்கம் வருவது போல கண்னைக் கட்டியது அவனுக்கு. தன் தோல் பைக்குள் கையை விட்டு மினரல் வாட்டர் பாட்டிலை எடுத்து ஒரு சிப் விழுங்கிக் கொண்டான்.
கூட்ட நெரிசலில் தன் கண்களை விட்டு அன்பைத் தேட ஆரம்பித்தான். அவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அந்தத் தூண் மீது லேசாகச் சாய்ந்தபடி பழைய நினைவுகளை அசைபோட ஆரம்பித்தான். அன்பு எப்படி என் வாழ்க்கையில் வந்தான்? என்னோடு எப்படி நண்பனாகக் கலந்தான். ச்சே.., அந்த சந்திப்பு நாட்கள் மறுபடியும் வருமா? என் வாழ் நாளில் 10 வருடங்களை வீணாகத் தொலைத்து விட்டேனே! இவனுக்கு இருக்கும் சிந்தனைக்கும் அறிவுக்கும் முன்பே இவனை சந்தித்து இருந்தால் நம் வாழ்க்கை இன்னேரம் சுபிட்சமடைந்திருக்குமே! இவன் எப்படி என்னோடு இணைந்தான்......,,,,,,??
*************************************************************************************
புழல் சிறைச்சாலை-சென்னை
"ஹலோ வெல்கம் டு அவர் புழல், அயாம் அன்பு..,அன்புச்செல்வன்"
"ஹாலோ மிஸ்டர் அன்பு, அயாம் அருள் ஃப்ரம் திருச்சி"
"திருச்சியா? பின்ன ஏன் திருச்சியிலேர்ந்து இங்க மாறி வந்தீங்க?”
“சிந்தாதிரிப்பேட்டையில் நடந்த ஒரு கேஸ் விசயமா ஸ்பெசல் அப்பாயின்மெண்ட். அதனால் தான் திருச்சி டூ சென்னை. நானும் கொஞ்ச நாள் முன்ன சென்னைல தான் இருந்தேன். ஏன் நான் சென்னைக்கு வரக்கூடாதா? “
“அதுயில்ல , இங்க லிவ்விங் என்விரான்மெண்ட் ரொம்ப மோசம், நான் கூட மதுரை தான். ஆனா இங்க ஜாப் விசயமா வந்து செட்டில் ஆயி 6 மாசமாச்சி. ஆனா பேமிலி இன்னமும் மதுரையில் தான் இருக்கு.மெட்ராஸ் லைப் எனக்கு புடிக்கவேயில்ல. அதனால மறுபடியும் மதுரைக்கே போய் செட்டிலாயிடலாமுன்னு பாக்குறேன். பை தி வே இனிமே நாம இன்னிலேர்ந்து ஃப்ரண்ட்ஸ், உங்கள அருள்னு கூப்பிடலாமா?"
" நோ..,வாடா போடான்னே கூப்பிடலாம்".
அன்று முதல் அருளும், அன்புவும் மிக மிக அன்யோன்யமாக பழக ஆரம்பித்தனர். காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்வது முதல் சாப்பாடு வரை எல்லாமே ஒன்றாகவே! இருவரின் நெருக்கத்தைப் பார்த்து புழல் சிறையே கண்வைத்தது.
தி- நகர் ரங்க நாதன் தெரு
"என்ன அருள்,கூட்டம் ரொம்ப ஓவரா இருக்கே!, நாம எதிர்பார்த்த மாதிரி கலெக்சன்ஸ் கிடைக்குமா?"
" நீ வேற சாதாரண நாட்கள்லயே கூட்டம் இங்க கலைகட்டும் சீசன்னா சொல்லவா வேணும்?தீபாவளி,பொங்கல் தான் சீசனே.கூட்டம் ஜாஸ்தியா இருந்தாத் தான் நமக்கு நல்லது.எப்டி இடிச்சாலும் கண்டுக்க மாட்டாங்க"
" நீ மொதல்ல ஒரு கல்யாணத்த செஞ்சி தொலை,சும்மா பேசிக்கிட்டு இருக்காம வந்த வேலைய கவனிப்போம்”
"அருள்..,அங்க பாரு எங்க பாத்தாலும் நம்ம டிபார்ட்மெண்ட் ஆளுங்க தான் எக்கச்சக்கமா நிக்கிறாங்க.அவங்க கண்ணுல பட்டோம்னா அவ்ளோதான். யார் கண்ணிலயும் படாம நம்ம வேலையை முடிச்சிக்கிட்டு போய்கிட்டே இருக்கனும். ஓக்கேயா??? அருள்....டேய்......
அருள்....டேய்...... அருள்……
திடீரென நினைவு வந்தவனாய் எழுந்தான் அருள்.
"என்னடா பகல்லயே கனவா? அங்க பாரு வண்டி வருதுண்ணு அந்தப் பொண்ணு மைக்க கதறிக்கிட்டு இருக்கு. அவனவன் வண்டி வரும் முன்னேயே தண்டவாளத்துக்குள்ள குதிச்சிடுவானுங்க போலிருக்கு, நீ என்னடான்னா பகல் கனவு கண்டுக்கிட்டு இருக்கே! இந்தா,இந்த கூல்டிரிங்ஸ்ஸ சாப்ப்புட்டு கிளம்பு. ஆண்டவா! இன்னிக்கு என் முன்னாடி நல்ல கலர்கலரான பிகர்கள உக்கார வையி"
மாட்டு வண்டிப் பந்தயத்தில் நாக்கு தள்ள ஓடும் மாட்டைப் போல பல தடைகளையும் வெற்றிகரமாகச் சமாளித்து ஒரு வழியாக ஒன்றரை மணி நேரம் தாமதாக வந்து சோர்ந்தது.,சாரி சேர்ந்தது பல்லவன். பல நாள் பட்டினி கிடந்தவன் பிரியாணியைக் கண்டது போல வண்டி வந்து சேர்ந்ததும் அன் ரிசர்வ் டிக்கெட் உள்ளவர்கள் அதை நோக்கிப் பாய்ந்தார்கள்
"சீக்கரம் வாடா, இங்க பத்தியா கூட்டத்த, இவனுக பூரா அன் ரிசர்வ் டிக்கெட்டு. அன் ரிசர்வ்க்கு மொத்தமே 4 பெட்டி தான். இங்க நிக்கிற கூட்டத்த 40 பெட்டிகளில் ஏத்தினாலும் பத்தாது"
" அதுக்கு அவங்க என்ன பண்ணுவாங்க? நாள் முழுக்க கியூவில நின்னாலும், அழகா ஏசி ரூம்ல உக்கார்ந்து அவனவன் ஆன்லைன்ல ரிசர்வ் பண்ணிக்கிட்டு போயிடறான். சரி சரி நம்ம பெட்டி எண் எஸ்14 எங்கேன்னு தேடு"
சொன்னபடி இருவரும் பிளாட்பாரத்தில் நடந்தபடி அவர்களின் பெட்டியைத் தேட ஆரம்பித்தார்கள். நடந்தபடி அன்புவிடம் குனிந்த அருள் "அன்பு, அது பத்திரமா இருக்கான்னு பாரு. விழுப்புரம் வந்தவுடன் தான் நாம அதுக்கு வேல குடுக்கனும். அது வர யார் கண்ணிலும் தப்பா பட்டுடாம கவனமா வா" சொன்னபடி அருளும் அன்புவும் பெட்டிகளைத் தேட ஆரம்பித்தார்கள். நடக்கப்போகும் விபரீதம் அறியாமல் அனைவரும் தங்கள் இடங்களைத் தேடுவதிலே மட்டுமே குறியாக இருந்தார்கள்
எஸ்14 பெட்டியைத்தேடி உள்ளே சென்றனர் இருவரும். அவர்களின் சீட்டு நம்பரை சரிபார்த்தவாறே கூட்டத்தை தள்ளிக்கொண்டு சென்று அவர்களின் இருக்கையைப் பார்த்த இருவரும் இன்ப அதிர்ச்சியில் சில நிமிடம் அப்படியே நின்றனர். அருள் சுதாரித்தவாறு அன்புவிடம் "டேய் மச்சான் நான் சொன்னேன்ல அதே மாதிரி நம்ம சீட்டுக்கு எதிரிலே அழகான சிட்டு"
இருவரும் அந்தப் பிகரை வாயில் ஜொல்வடிய பார்த்தவாறே தங்களின் இருக்கைகளுக்குக் கீழே லக்கேஜ் பேக்குகளைத் தள்ளிவிட்டு அமர்ந்தனர்..
இருவரும் வந்து உக்கார்ந்த நிலையைப் பார்த்துவிட்டு அந்தப் பெண்ணின் அருகே அவளின் கணவன் போல அமர்ந்திருந்த அவன் இவர்களைப் பார்த்து
"ஹல்லோ, அயாம் மூர்த்தி, இது என் உட்பி திவ்யா"
"ஹாய், நான் அருள், இது என் நண்பன் அன்பு"
நைசாக அருள் அன்புவிடம்
"டேய் உட்பின்னா என்னடா?"

"உட்பின்னா கல்யாணம் மட்டும் ஆகியிருக்காது ஆனா மத்ததெல்லாம் ஆகியிருக்கும்"
"அப்பறம் மூர்த்தி சார்,எனக்கு திருச்சி, இவனுக்கு மதுர, உங்கள் சொந்த ஊர் எதுன்னு நான் தெரிஞ்சிக்கலாமா?"
"ரியலி.., நீங்க திருச்சி தானா? நான் திருவரங்கம், இவளும் தான். நாங்க ரெண்டு பேரும் ஒரே கம்பெனில தான் ஒர்க் பண்றோம். அநேகமா அடுத்த தீபாவளி எங்களுக்கு தலை தீவாளியா இருக்கும்"
"கம்பெனின்னா அது என்ன கம்பெனின்னு நான் தெரிஞ்சிக்கலாமா மூர்த்தி சார்" அன்பு ஆர்வமாய்க் கேட்டான்.
"சோயாசிஸ்ன்னு ஒரு சாப்ட்வேர் கம்பெனி, ஆமா நீங்க எங்க ஒர்க் பண்றீங்க?"
அன்பு அருளைப் பார்க்க, அவன் அந்த தேவதையைப் பாத்தவாறே கதையை அளக்க ஆரம்பித்தான் . ரயிலும் நகர்ந்து வேகமெடுக்க ஆரம்பித்தது. சொந்தக் கதையை பலதடவைக் கேட்டு போரடித்து விட்டதாலும் காத்திருந்த அசதிக்கு ரயிலின் தடக்தடக் சவுண்டாலும் அப்படியே அன்பு சொக்க ஆரம்பித்தான். பக்கத்தில் அருள் எப்படியாவது அந்த தேவதையைப் பேசவைத்துவிட வேண்டும் என்ற குறிக்கோளோடு அள்ளிவிட்டுக்கொண்டிருந்தான். மூர்த்தியும் அருளும் நீண்ட காலம் பழகிய நண்பர்கள் போல பேச ஆரம்பித்தனர். இடையிடையே தேவதையும் பேச ஆரம்பித்தாள். ஆனால் இதில் நாட்டாம் இல்லாத அன்பு வழக்கம்போல தன் பழைய பிளாஸ்பேக்கை அசை போட ஆரம்பித்தான்.
அன்பு எப்படி என் வாழ்க்கையில் வந்தான்? என்னோடு எப்படி நண்பனாகக் கலந்தான். ச்சே.., அந்த சந்திப்பு நாட்கள் மறுபடியும் வருமா? என் வாழ் நாளில் 10 வருடங்களை வீணாகத் தொலைத்து விட்டேனே! இவனுக்கு இருக்கும் சிந்தனைக்கும் அறிவுக்கும் முன்பே இவனை சந்தித்து இருந்தால் நம் வாழ்க்கை இன்னேரம் சுபிட்சமடைந்திருக்குமே! இவன் எப்படி என்னோடு இணைந்தான்......,,,,,,??
புளி சாதம்,லெமன் சாதம்...,,,டீ..,காபி..,டீ.,காபி..,
சத்தம் கேட்டு விழித்த அன்பு, வண்டி விழுப்புரத்தில் நிற்பதை உணர்ந்தான். இங்கே அருள் இன்னும் தன் கதையை நிறுத்தவில்லை.
"சரி வாங்க ஏதாவது காப்பி சாப்பிட்டு வரலாம்"
"இல்ல மூர்த்தி சார், நாங்க வரும்போதே ஃபுல்லா சாப்புட்டோம். நீங்க போய்ட்டு வாங்க"
இருவரும் இறங்கி போவதைக்கண்டு சில வினாடிகளில் சுதாரித்த அன்பு,அருளிடம்
"என்னடா பார்ட்டி படிஞ்சிருச்சி போலிருக்கே"
"ஆமான்டா, ரொம்ப பிரண்ட்ஸ் ஆயிட்டோம். அதெல்லாம் சரி. நீ பிஸ்கட்ட எங்க வச்சிருக்கே"
"இதோ இருக்கு மாமே, முதல் 6 பிஸ்கட்டு நார்மல்,அது நமக்கு அதுக்கப்பறம் உள்ளது எல்லாமே அவங்க ரெண்டு பேருக்கும். ஒன்னு சாப்பிட்டா போதும் 3 மணி நேரத்துக்கு கண்விழிக்கவே மாட்டான்..அது சரி அவங்கிட்ட என்ன இருக்குன்னு ஒரு மாதிரியா மேட்டர போட்டியா?"
"போட்டேன்டா, அந்தப் பிகர் வச்சிருக்குற பேக்குல 3 லட்ச ரூபா மதிப்புள்ள வைர நெக்லஸ் இருக்காம்,லலிதா ஜூவலர்ஸில் பர்ச்சேஸ் பண்ணினதப் பத்தி இப்ப தான் சொன்னான் அந்த முட்டாள் மூர்த்தி"
"அருள்,ஏதோ சாதாரணமா பிட்பாக்கெட் அடிச்சி அஞ்சும் பத்துமா வாழ்க்கைய ஓட்டிக்கிட்டு இருந்த என்னைய இன்னிக்கு லட்சலட்சமா காசு பாக்க வச்சிட்டியே! நான் இத்தன நாள் உன்னய மிஸ் பண்ணிட்டேனே?"
"அதெல்லாம் ஓக்கே, அன்னிக்கு ரங்கநாதன் ஸ்டீரிட்ல அடிச்ச கலெக்சன்லாம் கரெக்டா பங்கு வச்சியா, கணக்குல ஏதாவது தப்புவந்திச்சி நான் மனுசனா இருக்கமாட்டேன் ஆமா"
"அதெல்லாம் கரெக்டா இருக்கு, சரி சரி வாய மூடு, அங்க பாரு அதுங்க ரெண்டும் வருதுங்க"
இருவரும் வந்து இருக்கையில் அமர்ந்தவுடன் ரயில் நகர ஆரம்பித்து வேகம் பிடித்தது. மீண்டும் அருள் வழக்கம் போல அவர்களிடம் கடலையைப் போட ஆரம்பித்தான். இந்த முறை அந்த தேவதை நன்றாகவே பேசியது.
ரயிலின் வேகம் அதிகமாகியது. திருச்சி நெருங்க இன்னும் இரண்டரை மணி நேரமே இருந்தது. சூரியன் இந்தியப் பிரதேசத்தில் தன் கடமையை முடித்து விட்டு அடுத்த நாட்டை எழுப்ப கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து கொண்டிருந்தான். மாலைப் பொழுதில் லேசாக பசிக்க ஆரம்பித்தது. அருள் , அன்பிடம் பிஸ்கெட் எதுவும் இருக்கா எனக்கேட்க, அன்பு தன்னிடம் தயாராக இருந்த அந்த குட்டே பிஸ்கெட்டை எடுத்து அருளிடம் கொடுத்தான். அதைப் பிரித்த அருள் அதிலே மூன்றை எடுத்து அன்புவிடம் கொடுத்து விட்டு அடுத்த மூன்றை எடுத்து சாப்பிட ஆரம்பித்தான். திடீரென நினைவு வந்தவனாக எதிரிலே இருந்த மூர்த்தியிடம் அதை நீட்ட முதலில் மறுத்தவன் பின்னர் இரண்டை எடுத்துக் கொண்டு ஒன்றை எடுத்து ஹேமாவிடம் நீட்ட தடுத்த அருள்
"அட நீங்க சாப்பிடுங்க சார்.இதோ இருக்கு" என மீதம் இருந்த பாகெட்டை ஹேமாவிடம் நீட்ட அவளும் அதை வாங்கி சுவைக்க ஆரம்பித்தாள். தன் திட்டம் இனிதே நிறைவேறுவதை நினைத்து மகிழ்ந்த அருள் அன்புவிடம்
"டேய் தண்ணீர் பாட்டிலை எடுடா"
"தண்ணீர் ஏதுக்குங்க? எங்களிடம் கூல்டிரிங்ஸ் இருக்கு, ஹேமா கூல்டிரிங்ஸை எடுத்துக் கொடு, நான் எப்பவுமே பயணம் செஞ்சா நாலஞ்சி பாட்டில் மேங்கோ ஜூஸ் வாங்கிப்போட்டிடுவேன்.அது எப்படியும் ஊருக்கு போறதுக்குல்ல காலியாயிடும். இன்னிக்கு பாருங்க நான் வாங்கும் போதே உங்களுக்கும் சேர்த்து வாங்கியிருகேன் போலிருக்கு"
அப்பாவியாக மூர்த்தி சொல்ல, அங்கே ஹேமா தன் அழகிய கையில் ஜூஸை எடுத்து அருள் மற்றும் அன்புவிடம் கொடுக்க,ஹேமா கொடுத்தால் விசத்தையே குடிக்கும் முடிவில் இருந்த அருள் அதை வாங்கி குடிக்க ஆரம்பித்தான்.
யாரோ அடித்துப் போட்டது போன்ற அசதியில் உடம்பு எழும்ப மறுக்க மெதுவாக எழுந்தான் அருள்.சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு அதிர்ச்சியடைந்த அருள் அருகே படுத்திருந்த அன்புவை எழுப்பினான்..,
"டேய் அன்பு,டேய்"
"விடிஞ்சிருச்சாடா, ஹேப்பி தீவாளி"
"ஹேப்பி தீவாளியா? டேய் முழிச்சிப் பாருடா எங்க இருக்கோம்னு"
உணர்வு வந்த அருள் சுற்றும் முற்றும் கண்களைச் சுற்றினான்.
அது ஒரு காவல் நிலையம் என்பதை அப்போது உணர்ந்தான். அங்கேயிருந்த டிவியில் செய்திகள் ஓடிக்கொண்டிருந்தன.
வணக்கம்.., தலைப்புச் செய்திகள்...,
"தீபாவளி இன்று உற்சாகக் கொண்டாட்டம், முதல்வர் கலைஞர் மக்களுக்கு வாழ்த்து"
"திருச்சி ரயிலில் மயங்கிக் கிடந்த மயக்க மருந்து கொள்ளையர்கள் பிடிபட்டனர், அவர்கள் எவ்வாறு மயக்கமடைந்தனர் என போலீஸ் விசாரணை"
இதைக் கேட்டுக்கொண்டிருந்த அன்பு திடீரென அந்த அறையின் மூலையில் பார்த்துத் திடுக்கிட்டான். டிவியைப் பார்த்துக் கொண்டிருந்த அருளை அவசரமாக உசுப்பினான்.
"டேய் அங்க பாரு, அருள் அங்க சீக்கிரம் பாருடா"
அன்புவின் அவசரக்குரலைக் கேட்டு அங்கே பார்த்த அருள் திடுகிட்டான்.
அங்கே....
மூர்த்தி ஜட்டியோடு உக்கார்ந்திருந்தான்.அதைப் பார்த்த அருளுக்கு தன்னை மறந்து சிரிப்பு வந்துவிட்டது.
"யோவ், சோயாசிஸ் மூர்த்தி என்னய்யா நீ இங்க உக்காந்திருக்கே?"
"ஏன்டா கேக்க மாட்டீங்க, நான் ஏதோ என்னால முடிஞ்சது கூல்டிரிங்ஸ்ல மயக்க மருந்த கலந்து மத்தவன்கிட்ட ஆட்டயப் போட்டுக்கிட்டு இருந்தேன். ஆனா எனக்கே பிஸ்கட் குடுத்து ஆப்பு வச்சிட்டியலடா!"
"யோவ், நீயும் நம்ம தொழில்காரன் தானா? ஆமா எங்க உன் உட்பி திவ்யா? அவளும் பிராடு தானா?"
"அந்தா பாரு லேடி போலீஸ்கிட்ட வாக்குமூலம் கொடுத்துக்கிட்டு இருக்கா"
"அருளு,.., ஏன்டா அருளு, நான் அப்பவே சொன்னேன், ரங்கநாதன் தெருவுல அடிச்சது போதும், வாடா பஸ்ல போகலாமுன்னு சொன்னேன், நீதான் ஃபைனல் டச்சின்னு சொல்லி இங்க கொண்டு வந்து உக்கார வச்சிட்டியடா"
அந்த நேரம் அன்புவிடம் வழக்கமான அந்த பிளாஸ்பேக் வர அதை அவசரமாக கையை வைத்து ஆட்டி கலைத்து விட்டு இனி இந்தப் பக்கம் வந்தே, தொலைச்சிடுவேன். கடுப்பாகிச் சொன்னான் அன்பு..
"டேய் எந்திரிங்கடா, அய்யா வந்திட்டாரு. ஏன்டா, உங்க போட்டோவத்தான் ஊரு பூரா ஒட்டியிருக்கமடா. அப்படியிருந்தும் நீங்க இன்னும் திருந்தலையாடா, நல்ல நேரம் நீங்க உங்களுக்குளேயே மருந்த மாத்தி மாத்தி குடுத்துக்கிட்டதால இரண்டு குடும்பம் தப்பிச்சது, எந்திரிங்கடா சீக்கிரம்"
என அருளையும் அன்பையும் முதலில் முதுகைப் பிடித்துத் தள்ள, கடுப்பான அருள்
"ஏன் ஏட்டையா அதான் வர்ரோம்ல, அப்பறம் ஏன் இப்படி புடிச்சி தள்ளூறிய?"
"இது தான்டா தீபாவளி சிறப்புத் தள்ளுபடி"


No Response to "தீபாவளி சிறப்புத் தள்ளுபடி--அதிரடிச் சிறுகதை"
Post a Comment