
பித்ரா எனப்படுவது நோன்புப் பெருநாளை அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்பதற்காக செய்யப் படுவதாகும். அதாவது ஒரு குடும்பத்தில் இருக்கும் ஒரு தலைக்கு இரண்டரைக் கிலோ அரிசி வீதம் கணக்கிட்டு அதை பொருளாகவோ பணமாகவோ வழங்கலாம். அரிசியாக வழங்கவேண்டும் என்பதற்காக ரேசனின் ஒரு ரூபாய் அரிசியைக் கொடுக்கக் கூடாது. நீங்கள் உண்ணும் அரிசியின் மதிப்பு தான் இங்கே கணக்கிடப்பட வேண்டும். அதே நேரம் நீங்கள் உண்ணும் அரிசி 1 ரூபாய் அரிசியாக இருந்தால் அதைக் கணக்கிடுவதில் தவறில்லை. அரிசியாகக் கொடுப்பதற்கு பதில் பணமாகவோ அல்லது பெரு நாள் கொண்டாடத் தேவையான பொருட்களாகவோ வழங்குவது சிறப்பு. இது அனைத்தும் பெருநாளைக்கு முன்னதாக கொடுத்து முடிக்கப் பட்டுவிட வேண்டும்.
பித்ரா பொருட்களை மாற்று மத சகோதரர்களுக்கு வழங்கலாமா?:
தாராளமாக வழங்கலாம். ஆனால் பெருநாள் கொண்டாடுவது முஸ்லீம் மக்களாக இருப்பதால் அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து மீதமுள்ள பொருட்களை மாற்றுமத ஏழை மக்களுக்கு தாராளமாக வழங்கலாம்.
பித்ரா பொருட்களை எங்கு யாரிடம் வழங்க வேண்டும்?
பித்ராவைப் பொருத்தவரை அதைப் பெறுவதற்கு மிகத் தகுதியானவர்கள் உங்களின் ஏழைச் சொந்தங்களே! அவர்களுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும். உங்கள் குடும்ப வட்டாரத்தில் அனைவருமே ஓரளவிற்கு வசதியாக இருந்துவிட்டால் உங்கள் பகுதியிலுள்ள உங்களுக்கு நன்கு அறிந்த ஏழை குடும்பத்திற்கு வழங்கலாம். அல்லது தற்போது பல அமைப்புகள் சார்பாக பித்ரா சேகரிக்கப் படுகிறது. அவர்களிடமும் உங்கள் பொருட்களை வழங்கலாம். சென்ற வருடம் பித்ரா எங்கள் பகுதியைச் சார்ந்த குழுவினர் முங்கூட்டியே பயனாளிகளைப் பட்டியலிட்டு விட்டதால் வினியோகம் மிக எளிமையாக இருந்தது.
பித்ரா பொருட்களின் அட்டவனை:
இது எங்கள் பகுதியில் வழங்கப் பட்ட பித்ரா பொருள் பையின் பட்டியல். ஆனால் இப்படித்தான் இருக்க வேண்டும் என எவ்வித கட்டாயமும் இல்லை.
அரிசி : 2 கிலோ
ஆட்டிறைச்சி: ½ கிலோ
முட்டை: 5
நெய்: 50கிராம்
சேமியா: 1 பாக்கெட்
ஜவ்வரிசி: 100 கிராம்
சீனி : ½ கிலோ
தேங்காய் : 1
இஞ்சி பூண்டு : 100 கிராம்
மசாலாக்கள் : 100 கிராம்
இதர வாசனை பொருட்கள் : 25 கிராம்
சமையல் எண்ணெய்: 250 மிலி
காய்கறி கலவை: ½ கிலோ
மற்றும் 50 ரூபாய் பணம்.
இது போல பொருட்களை பாக்கெட் செய்து கடைசி நாள் இரவு சரியாக சேர வேண்டியவர்களிடம் சேர்க்கப்பட்டது. அந்தப் பயணாளிகள் பட்டியலில் பாதி பேர் தாமாக சென்று யாசிக்காதவர்கள் என்பது தான் இதிலே குறிப்பிட்ட விடயம். அவர்களின் நிலையை நன்கறிந்து மிகவும் வற்புறுத்தித் தான் அவர்களுக்கு வினியோகிக்கப் பட்டது.
பெருநாள் இரவு:
பெருநாளின் முந்தைய இரவுகளில் டாஸ்மாக் கடையின் விற்பனை படுசூடு பிடிக்கும். காரணம் காலையில் கொண்டாடப் போகும் விழாவிற்கு இரவே உற்சாக பானம் அருந்தி வரவேற்பு நடக்கும். 30 நாட்களில் நோன்பு நோற்ற சிறப்பினை ஒரு வினாடியில் அழித்துவிடும் இந்த கொடுபாதகச் செயலை இன்னமும் பல ஊர்களில் இளைஞர்கள் மேற்கொள்கிறார்கள் என்பதே வேதனைக்குரிய செய்தி.
நல்லிணக்கம்:
தங்கள் வீடுகளில் அல்லது கடைகளில் வேலை செய்யும் மாற்றுமத சகோதரர்களுக்கு பெருநாள் அன்பளிப்பு கொடுப்பது ,அவர்களுக்கும் உடை எடுத்துக் கொடுப்பது மிகவும் சிறப்பானது. அதுமட்டுமின்றி பெருநாள் விருந்தினை அவர்களோடு சேர்ந்து அமர்ந்து உண்ணுவது மிகவும் நன்மை பயக்கும். அதேபோல முஸ்லீம் சகோதரர்கள் தங்களின் மாற்றுமத நண்பர்களை பெருநாள் விருந்திற்கு அழைத்து அவர்களுக்கு சிறப்பு செய்வது விருந்தினர் போற்றதும். ஆனால் அந்த விருந்தில் மேற்படி டாஸ்மாக் சமாச்சாரம் அறவே தவிர்க்கப் படவேண்டும்.
ஆக இந்த புனிதமிக்க ரமலான் மாதத்தில் நம்மாள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு நல்ல அமல்களைச் செய்து இறைவனின் நன்மதிப்பைப் பெருவதோடு நமது சகோதர்கள், நண்பர்களின் நட்பையும் சொந்தத்தையும் பேணிக்கொள்வது இறைவன் நமக்குத் தந்த இந்த அருட்கொடை மாதத்தின் சிறப்புகளாகும்.
வாசகர்களுக்கும் நண்பர்களுக்கும் உடன்பிறப்புகளுக்கும் என் உளம் நிறைந்த ரமலான் வாழ்த்துக்கள்.


தகவலுக்கு நன்றி
தொடருந்து எழுதுங்கள்
இனிய ரமலான் வாழ்த்துக்கள்
சிறப்பான தகவல்கள்
வாழ்த்துக்கள்:
ரமலான் முபாரக்
// உலவு.காம் //
//தமிழினி//
//அன்புடன் மலிக்கா //
உங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. தொடந்து இணைந்திருங்கள்.