வருடத்திற்கு 11 மாதமும், வாரத்திற்கு 7 நாட்களும், நாளைக்கு சுழற்சி முறையில் 12 மணி நேரமும் ஹோட்டல்களே கதி என கிடந்து வரும் மலேசியர்களுக்கு ரமலான் மாதம் வந்து விட்டால் அவர்களது வாழ்க்கையே போரடித்துப் போய்விடும். காரணம் ரமலான் மாதம் முழுவதும் நோன்பு முடியும் 30 நாட்களும் அங்குள்ள உணவகங்களில் மலேசியர்கள்(முஸ்லீம்கள்) அமர்ந்து சாப்பிடுவதற்கு மலேசிய அரசு தடை விதித்திருக்கிறது. ஆனால் இந்தத் தடை மற்ற மதத்தவர்களுக்கு கிடையாது. சீனர்களும், இந்தியர்களும் தாராளமாக உணவகங்களில் அமர்ந்து சாப்பிடலாம்.

மலேசியர்களின் முக்கியப் பொழுது போக்கே உணவகங்களில் உக்கார்ந்து அரட்டை அடிப்பது தான். ஒரே ஒரு தேனீர் வாங்கிக்கொண்டு அமர்ந்து பொழுது சாயும் வரை அல்லது அடுத்த நாள் வரை பேசிக்கொண்டிருப்பார்கள். நமது ஊர் டீக்கடைகளில் ஒரு டீயை வாங்கிக் கொண்டு 5 நிமிடத்திற்கு மேல் அமந்தால் நம்ம ஊர் டீ மாஸ்டர்கள் சுடுதண்ணீரைப் பிடித்து பட்டும் படாமலும் மேலே ஊற்றிவிடுவார்கள். ஆனால் மலேசியாவைப் பொருத்தவரை ஒரு டீயை வாங்கிக்கொண்டு ஒருவர் அமந்தால் அவர் அந்த இடத்தை விட்டுப் போகும் வரை அந்த கிளாஸை எடுக்கக் கூடாது. அவ்வாறு எடுத்தால் வேதாளம் முருங்கை மரமேறிவிடும். சிகெரெட்டைப் புகைத்துவிட்டு அந்த கிளாஸிலேயே அனைப்பார்கள்.
அப்பேற்பட்ட மக்களின் முக்கியப் பொழுதுபோக்குத் தளமான ஹோட்டல்களில் ரமலான் மாதத்தில் மட்டும் அந்த நாட்டு அரசு இம்சையைக் கொடுத்து விடும். நம்ம ஊரு பத்தாம் வகுப்பு/பணிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் பிட்டு அடிப்பவர்களைப் பிடிக்க பறக்கும் படை அமைக்கப் படுவது போல மலேசியாவில் இந்த ஒரு மாத காலத்திற்கு “உக்காமா” என்று சொல்லக்கூடிய சிறப்பு பறக்கும் படை அமைக்கப் பட்டிருக்கும். அவர்கள் நகர்முழுவது சிறப்பு வாகனங்களில் சுற்றி வந்து ஒவ்வொரு உணவகமாக புகுந்து சோதனையிடுவார்கள். யாராவது இஸ்லாமியர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தால் அவர்களை கையும் தட்டுமாகப் பிடித்து நீதிமன்றத்திலே நிறுத்தி விடுவார்கள். அவர்களுக்கு இடமளித்த அந்தக் கடைக்கும் சீல் வைக்கப்படும்.
அவர்களின் பொழுதுபோக்குத் தளமான, புகலிடமான உணவகங்களுக்குப் போவதற்கு தடை விதிக்கப் பட்டுள்ளதால் அவர்கள் படும் பாடு மிகவும் பரிதாபமாக/காமெடியாக இருக்கும். உணவகத்தில் அமர்ந்து சாப்பிட மட்டும் தான் தடை, ஆனால் பார்சல் வாங்கத் தடையில்லை. நோன்பு துவங்கிய முதல் இரண்டு நாட்களுக்கு கடைகளுக்கு சுத்தமாக வியாபாரம் இருக்காது. ஆனால் ஒரு 4 நாட்கள் கழித்து கூட்டம் வழக்கம் போல கட்டியேற ஆரம்பிக்கும். அந்த வகையில் மலேசியர்களின் சிந்தனையில் உதித்தது தான் கருப்புப் பை.
அதாவது சாதாரன நாட்களில் பார்சல் வாங்கினால் நமது ஊர் போலவே அங்கேயும் கலர்கலரான பிளாஸ்டிக் பைகளில் போட்டு கொடுத்து அனுப்புவார்கள். ஆனால் நோன்பு காலத்தில் மட்டும் கருப்பு பிளாஸ்டிக் பையில் தான் போட்டுக் கொடுக்க வேண்டும். காரணத்தைக் கேட்டால் மிக காமெடியாக இருக்கும்.அதாவது அவர்கள் என்ன வாங்கிக்கொண்டு செல்கிறார்கள் என்பது மற்ற்வர்களுக்கு தெரியக்கூடாதாம். ஆனால் இந்தக் கருப்பு பிளாஸ்டிக் பை நோன்புகாலங்களில் உணவகங்களில் மட்டும் தான் பயன்படுத்தப் படும் என்பது அங்கேயிருக்கும் குழந்தைகளுக்குக் கூட தெரிந்த லாஜிக்.
ஆக இந்த மாதத்தில் ஒருவர் கருப்பு பிளாஸ்டிக் பையில் ஏதாவது வாங்கிச் சென்றால் அது நிச்சயம் அது சோத்துப் பார்சல் என எளிமையாகப் புரிந்து கொள்ளலாம். ஆனாலும் இது ஏதோ அலிபாபா மர்ம ரகசியம் போல இன்று வரையிலும் பொத்திப் பொத்தி வைத்து கருப்பு பையைக் கட்டியழும் மலேசியர்களை என்னவென்று சொல்ல? சரி பார்சல் வாங்கியாகி விட்டது. அதை சாப்பிட இடம்? அதற்கு அவர்கள் அலையும் அலைச்சல் இருக்கிறதே! பரிதாபம். மாடிப்படிக்கு கீழே சென்று பதுங்குவார்கள்.பல கிலோ மீட்டர்கள் பயணம் செய்து காடுகளுக்குள் சென்று ஒதுங்குவார்கள். இண்டு இடுக்கு சந்து பொந்து என எங்கு பார்த்தாலும் வேகவேகமாக சாப்பிட்டு விட்டு கையைக் கூடக் கழுவாமல் தங்களது வண்டிகளில் ஏறி பறந்து விடுவார்கள்.
என் அனுபவத்தில் ஒரு பையன் சாப்பாடு பார்சலை வாங்கிக்கொண்டு நேரே அந்தக் கடையின் கழிவறைக்குச் சென்றான். நீண்ட நேரமாகியும் கதவுதிறக்கப் படாததால் ஊழியர்கள் படை திரண்டு கதவைத் தட்டினால் கொஞ்ச நேரம் கழித்து கதவைத் திறந்தான். கதவைத் திறந்து அப்பாவியாக முழித்தான். இப்போது அவன் கையிலே அந்தப் பார்சல் இல்லை. உள்ளே புகுந்து பார்த்தால் அங்கே உடை மாட்டப் பயன்படும் ஆணியில் அந்தப் பை தொங்கிக்கொண்டிருந்ததை எடுத்துப் பார்த்தால் உள்ளே வெறும் பேப்பர் தான் இருக்கிறது. அன்றைக்கு எனக்கு வந்த சிரிப்பு இன்று அதை நினைத்தாலும் நீடிக்கிறது.
நோன்பு காலங்களில் நோன்பு நோற்காவிட்டாலும் நோன்பாளியை போல நடந்து கொள்ளுங்கள் என நபிகளாரின் வாக்கு இருக்கிறது. ஆனால் சாப்பிடுவதையே பொழுதுபோக்காகக் கொண்ட மலேசியர்களில் 60% பேர் அதைக் காற்றில் பறக்கவிட்டு நோன்பினைப் புறக்கணிப்பது என்ன நியாயம்?
ஆனால் நோன்பு நோற்றாலும் நோற்காவிட்டாலும் நோன்பு திறப்புக்கு மட்டும் தாமதம் இல்லாமல் சரியாக ஆஜராகிவிடுவார்கள்.இனியாவது அவர்கள் திருந்தி நல்ல நிலை அடைவதற்கு பிரார்தனை செய்வோமாக.


கடவுள் பக்தியைக் கட்டாயமாக்கினால் கடவுளுக்குத் தெரியாதா.
இதென்ன கொடுமை?? சிறப்புப்படையினர் எப்பிடிக் கண்டுபிடிப்பினம் அவர்கள் முஸ்லிம் என்று?
\\அவர்கள் திருந்தி நல்ல நிலை அடைவதற்கு பிரார்தனை செய்வோமாக.\\
திருந்தும் அளவுக்கு பெரிய குற்றம் ஏதும் செய்யவில்லை என்றே நினைக்கிறேன்,
முதலில் மனிதன், பிறகுதான் மதம்
வாழ்த்துக்கள்
ஆனால் சாப்பிடுவதையே பொழுதுபோக்காகக் கொண்ட மலேசியர்களில் 60% பேர் அதைக் காற்றில் பறக்கவிட்டு நோன்பினைப் புறக்கணிப்பது என்ன நியாயம்?//
சாப்பிடுவதோ, நோன்பிருப்பதோ தனி மனித உரிமை. இதிலே நியாயம் அநியாயம் எங்கே வந்தது.
// goma //
//சினேகிதி//
//நிகழ்காலத்தில்...//
//குடுகுடுப்பை //
நன்றி நெஞ்சஞ்களே! கருத்துக்களுக்கும்,வருகைக்கும்,.
அதே போல நோன்பின் கடமைகளையும் அதன் நோக்கங்களையும் முந்தைய பதிவிலே சொல்லியிருக்கிறேன். அதையும் படித்துக்கொள்ள அன்புடன் வேண்டுகிறேன்.
அலோ நீங்களும் என்னை மாதிரியே அவதார் வைத்து இருக்கீங்க