
சில வருடங்களுக்கு முன்னால் யாகு மற்றும் ரெடிஃப் மெயில் மட்டுமே தெரிந்திருந்த மற்றும் கணக்கிருந்த எனக்கு ஜிமெயில் என்று ஒரு புதிய மெயில் சேவை வந்திருப்பதாக எதிலேயோ படித்தேன். சரி இலவச கணக்குத் தானே! நாளைக்கே துவக்கிவிடலாம் என்று நினைத்து ஜிமெயில் தளத்தை திறந்தால் அங்கே காத்திருந்தது ஒரு சிக்கல். அதாவது அந்த நேரத்தில் இப்போது உள்ளது போல மிக எளிமையாக ஜிமெயில் கணக்கு திறக்க இயலாது. யாராவது ஜிமெயில் உபயோகிப்பாளர் (மனது வைத்து) நம் மெயிலுக்கு இன்விடேசன் அனுப்பி அந்த லிங்க் மூலமாக மட்டுமே ஜிமெயில் கணக்கு துவக்க இயலும்.
ஒரு நண்பனிடம் ஜிமெயில் கணக்கு இருந்ததால் அவனிடம் எனக்கு இன்விடேசன் அனுப்பச் சொல்லி கேட்டேன். அவனும் இந்தா அந்தா என இழுத்தடித்து என்னுடைய தொடர் நினைவூட்டல் காரணமாக ஒரு வாரம் கழித்து அனுப்பிவைத்தான். (கிராஸ்டாக்: இன்றைக்கு ஜிமெயில் கணக்குத் திறக்க வேண்டுமானால் கைத்தொலைபேசி எண் அவசியம். )
அன்று தான் முதன்முதலாக ஜிமெயிலில் ஒரு கணக்கினைத் துவக்கினேன.ஆனால் என்னவோ யாகுவிலேயே கிடந்து ஊறிவிட்ட நமக்கு ஜிமெயில் சுத்தமாக பிடிக்கவில்லை. இன்னொன்று யாகுவிலே ஒரு மெயில் அனுப்பினால் அது அடுத்த வினாடி சென்று சேர்ந்துவிடும். ஆனால் ஜிமெயிலில் (இன்றும் கூட) ஒரு மெயிலை அனுப்பிவிட்டு நேரே கேண்டீன் போய் ஒரு டீ சாப்பிட்டுவிட்டு வந்து பார்த்தோமுன்னா அப்பதான் அது டெலிவரி ஆகியிருக்கும். காரணம் என்ன என்று இன்றுவரை தெரியவில்லை. ஒருவேளை அவர்களின் அகன்ற சேவை காரணமாக டெலிவரியில் தாமதமா எனத்தெரியவில்லை. அதன் பிறகு ஜிமெயில் கணக்கைத் திறப்பதேயில்லை. ஒரு நாள் நான் ஏதோ ஒரு தகவலை கூகிலில் தேட அந்த நேரத்தில் சிக்கியது ஒரு வலைப்பூ.
எதையோ தேடப் போய் என்னவோ கிடைத்தது போல கிடைத்தது தான் அண்ணன் பிகேபியின் வலைத்தளம். அதிலே வலைத்தளம் உருவாக்குவது,வடிவமைப்பது குறித்து மிக எளிமையாக அருமையாக விளக்கியிருந்தார் பிகேபி. நாமும் முயற்சிப்போமே என்று முதன்முதலாக ஒரு கணக்கினை துவக்கிவிட்டேன். அதிலே என்ன எழுதுவது? எப்படி எழுதுவது? ஒன்றுமே தெரியவில்லை. அந்த நேரத்தில் தமிழில் டைப் செய்ய எந்த விதமான கருவிகளும் இல்லை அல்லது எனக்குத் தெரியவில்லை. வெப்உலகம் (வெப்துனியா) மட்டும் தான் கமேண்ட் பகுதியில் யுனிகோட் டைப்பினை இணைத்திருந்தார்கள். உடனே ஒரு யோசனை வந்தது. அதாவது வெப்துனியாவில் வரும் சினிமா செய்திகளை அப்படியே காப்பிசெய்து அதை அப்படியே ஒட்டி தினமும் வெளியிடுதல். ஆனால் படிப்பது யார்? அன்றைக்கு தமிழ்மணமும் தேன்கூடும் திரட்டிகள் என்பது எனக்குத் தெரியவே தெரியாது. என் நண்பர்கள் சிலரிடம் என் தளத்தைப் பற்றி சொல்லி படிக்கச் சொல்லியிருந்தேன்.
அவர்களும் ஏதோ அந்த செய்திகளையெல்லாம் நான் எழுதுவதாக நினைத்து தினம் படித்து பாராட்ட ஆரம்பித்தார்கள். அந்த நேரத்தில் என் வாசகர்களின் எண்ணிக்கை மொத்தம் 6 பேர் தான். அதிலே நானும் ஒரு ஆள். கொஞ்ச நாட்களிலேயே குட்டு வெளிப்பட்டு அவர்கள் என் வலைப்பூவைப் பார்ப்பதை நிறுத்திவிட்டார்கள். அத்தோடு மறுபடியும் ஜிமெயிலுக்கு ஒரு பெரிய பூட்டைப் போட்டுவிட்டு மறுபடியும் யாகுவிற்கு தாவி விட்டேன்.
ஆனால் இன்றைய நிலை? இன்றைய நிலையில் கூகுலின் வளர்ச்சி பிரம்மிப்பூட்டுகிறது. கூகுள் (Gmail) இல்லாமல் (இணைய) வாழ்க்கையே இல்லை என்றாகிவிட்டது. எத்தனை வலைப்பூக்கள், எத்தனைத் திரட்டிகள் எத்தனை ஆயிரம் வாசகர்கள். பதிவர்களின் பிரவேசங்கள் அவர்களது கருத்துக்கள், மொக்கைகள், காமெடிகள், பதிவர் சந்திப்புகள் என அனைத்தையும் படித்து விட்டு இனியும் சும்மா இருப்பதாக உத்தேசம் இல்லை. ஏதோ என்னால் முடிந்ததை எழுத, என் எழுத்துலக ஆசான் தலைவர் கலைஞர் அவர்களின் பாதையிலே பயணிக்க இதோ நானும் களத்திலே, தளத்திலே இறங்கிவிட்டேன். முழுக்க முழுக்க வாசகர்கள்களின் நல்லாதரவோடு நானும் வெற்றிபெறுவேன் என்ற நம்பிக்கையில்,
அதைவிட மிகப்பெரிய அதிர்ஷடம் நமக்கு கிடைத்தது, இன்றைய பதிவுலகின் ஜாம்பவான் பதிவர்களை எந்த ஒரு இடுகையும் எழுதாமல் உடன்பிறப்புகளாகப் பெற்றது தான். மிக்க மகிழ்ச்சி. இத்தனை நாள் இழுபறிக்குக் காரணம் தளவடிவமைப்பு என வெளியே சொல்லிக்கொண்டாலும் உண்மையில் நேரமின்மை தான். இதோ இப்போது ஆ'ரம்பமாகிவிட்டது. எழுதுவோம் எண்ணங்களை எதிரொலியிலே!
எல்லாப் புகழும் இறைவனுக்கே...,
பிகு: ஒரு சுவாரஸ்யமான புத்தகத்தை படிக்கச்செல்லும் முன் அதிலே இருக்கும்
முன்னுரை கொஞ்சம் மொக்கையாகத் தான் இருக்கும். அதேபோல இந்த முன்னுரையை வைத்து நம்மோட மொத்த பதிவுமே மொக்கைன்னு நெனச்சிராதிக உடன்பிறப்புகளா!
பிழையிருந்தால் திருத்துங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள். வாருங்கள் வாழ்த்துங்கள்..
நிஜாம்


நல்ல அறிமுகம் தலைவரே..,
பி.கே.பி வைத்து தான் நானும் உள்ளே வந்தேன்.
வாருங்கள் நண்பரே!
வாழ்த்துக்கள்...கலக்குங்க..
வாழ்த்துக்கள் நிஜாம். தொடர்ந்து எழுதுங்கள்.
அன்பு நண்பர்கள்
@SUREஷ் (பழனியிலிருந்து)
@நட்புடன் ஜமால்
@தண்டோரா ......
@S.A. நவாஸுதீன்
ஆதரவிற்கும் கருத்துக்களுக்கும் நன்றி. தொடர்ந்து இணைந்திருங்கள்