
எத்தனையோ விஞ்ஞானம் மற்றும் புதிய புதிய கண்டுபிடிப்புகள் என உலகம் படுவேகமாக சுழன்று கொண்டிருக்கிறது. ஒரு காலத்தில் ஒரு அறை முழுக்க நிரம்பியிருந்த கம்ப்யூட்டர், இன்று கைத்தொலைபேசி அளவிற்கு வந்துவிட்டது. அமைந்தகரையில் அனுப்பும் ஒரு குறுந்தகவல் அடுத்த வினாடி அமெரிக்காவிலே கிடைக்கப் பெறுகிறது. என்னதான் முன்னேற்றம் இருந்தாலும் மனிதனால் சமாளிக்க முடியாமல் கடவுளைத் துணைக்கு அழைக்கக் கூடிய செயல்கள் தொடந்து நடந்துகொண்டுதான் இருக்கின்றன.
எனக்கெல்லாம் நினைவு தெரியாத காலத்தில் நமது தமிழகத்தில் காலரா எனும் கொடிய நோய் மனிதர்களை கரும்பாகப் பிழிந்து சக்கையாகப் போட்டது. அதன் பின்னர் கொடிய அம்மை நோயின் பரவல் மீண்டும் மனித இனத்தை கொத்துக்கொத்தாக கொன்று குவிக்க ஆரம்பித்தது. நம்முடைய சகோதரர்களின் வலது கையைப் பார்த்ததுண்டா? அவர்களின் வலது கையிலே இரண்டு சக்கரங்களின் அச்சுக்கள் இருக்கும். அதாவது அது அம்மைத்தடுப்பு சிகிச்சை என சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். என் கைகளிலே அந்த அச்சு இல்லை. காரணம் நான் பிறக்கும் முன் ஒரு வருடம் முன்னதாக அம்மை நோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது.
அடுத்து என் நினைவு தெரிந்து வந்து மக்களைக் குவியல் குவியலாக மூட்டை கட்டியது பிளேக் எனும் எலிக்காய்ச்சல். அதையும் கட்டுக்குள் கொண்டு வந்தனர் மருத்துவ விஞ்ஞானிகள். பேரழிவு, வியாதி வடிவில் மட்டுமா வரும்?. பூகம்பம், புயல், மழை, வெள்ளம் என மட்டுமே பேரழிவுகளாய் பழகிப்போயிருந்த நமக்கு சுத்தமாகத் தெரியாது சுனாமி என்னும் ஆழிப்பேரலை என ஒன்று வரும் என்று. ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பதாக ஜப்பானில் இந்த ஆழிப்பேரலை தாக்கியிருக்கிறது. TSUNAMI என்பது ஜப்பானிய மொழியாகும். அதிலும் மொத்த மொத்தமாய் பலிகொடுத்தோம்.பின்னர் பறவைக்காய்ச்சல். அதையும் ஓரளவிற்கு கட்டுக்குள் கொண்டு வந்து பரவும் வழிகளை அடைத்து தடுத்து வைத்து வைத்திய முறைகள் அறியப்பட்டன.
அடுத்ததாக சிக்குன் குன்யா. முடக்குவாத மடக்கு நோய் என பெயரிடப்பட்ட இந்த குன்யா காய்ச்சல் அதிகபட்சமாக அனைவரையும் மடக்கித் தான் போட்டதே தவிர உயிர்பலி என்பது மிககுறைவு தான். அதையும் கட்டுக்குள் கொண்டுவந்த வேளையில் தான் திடீரென வந்து நுழைந்தது இந்த ஸ்வைன் புளூ எனப்படும் பன்றிக்காய்ச்சல். H1N1 என்று பெயரிடப்பட்ட இந்த வைரஸ்கள் பன்றியிலிருந்து பரவுகின்றன. வெளி நாடுகளில் மட்டுமே அறியப்பட்ட இது இப்போது இந்தியாவிற்குள் புகுந்து தமிழகத்திற்குள்ளும் புகுந்து முதன்முதலாக ஒரு சின்னப் பிள்ளையை பலி எடுத்து அதன் எண்ணிக்கையைத் துவக்கிவிட்டது.
எல்லோருக்கும் பொதுவான இறைவா! இது போன்ற பேரழிவுகளில் சிக்கி எம்மக்கள் கூட்டங்கூட்டமாய் மாயும் இந்த அவலத்தைப் போக்க உன்னையன்றி வேறு யாரால் முடியும். நீயே பாதுகாவலன். உன்னிடம் மட்டுமே உதவியும் பாதுகாப்பும் தேடுகிறோம். எம்மக்களின் துயரங்களைப் போக்கி எங்களை இது போன்ற பேரழிவுகளில் இருந்தும் பாதுகாப்பாயாக.


ஆண்டவனை வேண்டுவதைத் தவிர வேறு வழியில்லை.
ஆண்டவா எங்களைக் காப்பாற்று.
@இராகவன் நைஜிரியா
வருகைக்கு நன்றி அண்ணாச்சி! நீங்கள் சொன்னது தான் ஒரே வழி. எல்லோரும் எல்லோருக்காகவும் பிராத்திப்போம்.