தமிழ் பேசும் மக்கள் என்ற ஒரே காரணத்திற்காகவும் அவர்களின் பூர்வீக பூமியை அபகரிப்பதற்காகவும் நிராயுதபாணிகளான தமிழ்மக்களை லட்சக்கணக்கில் மிகக் கொடூரமாக கொன்றுகுவித்த இலங்கையின் இடிஅமீன் ராஜபக்சேவுக்கும் அவனது ராணுவத்தினருக்கும் இன்னமும் அடங்காத இரத்தவெறி இப்போது தமிழக எல்லையில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. காலங்காலமாய் தமிழக மீனவர்களை அடித்தும் உதைத்தும், நிர்வாணப்படுத்தி மகிழ்ந்தும் வந்த சிங்கள ராணுவத்தினர், இன்றைக்கு ஒரு அப்பாவி மீனவரின் உயிரையும் சேர்த்து குடித்துவிட்டனர். இன்னமும் அவர்களுக்கு அடங்காத இரத்தவெறிக்கு ஒரே தீர்வு தமிழர்களின் இரத்தம் தான் போலிருக்கிறது. தங்களின் உயிரைப் பணயம் வைத்து எல்லையிலே சென்று மீன்பிடித்து வரும் மீனவனின் படகில் மீன் இருக்குமோ அல்லது அவனின் பிணம் இருக்குமோ என்று தங்களின் உயிரை கையில்பிடித்துக் கொண்டு காத்திருக்கும் தமிழகத் தாய்மார்களின் கண்ணீரை யாருமே கண்டுகொள்வதாகத் தெரியவில்லை.
வன்னிக்கலத்திலே செல்கள் சிதைக்கச் சிதைக்க படுகொலை செய்யப்பட்ட போதும், கையும் காலும் துண்டான குழந்தைகளுக்கு மருந்துகள் இல்லாமல் மண்ணை அள்ளிவைத்து அவர்களுக்கு சிகிச்சை அளித்த நாதியற்ற தமிழன் தான் அன்றைக்கும் இறந்தான், இன்றைக்கும் இறக்கின்றான். இனி என்றைக்கும் இறப்பான் போலத் தெரிகிறது. இந்தியப் பாரம்பரியத்தில் வந்தவனைக் கொலை செய்வதற்கு அந்நாட்டு வீரர்களுக்கு இங்கே கொடுத்த போர்பயிற்சிகளை இன்றைக்கு அவர்கள் தமிழக மீனவர்கள் மீது பட்டைதீட்டிப் பார்க்கிறார்கள். நடவடிக்கை எடுத்துவிட்டோம், தடுத்து விட்டோம், சொல்லி விட்டோம் என அன்றைக்கு சொல்லிச் சொல்லியே காய்நகர்த்திய காங்கிரஸ் அரசாங்கம் தான் இன்றைக்கும் தனது அதே பல்லவியை சுதி தப்பாமல் பாடிக்கொண்டிருக்கிறது. சீன எல்லையிலும், பாகிஸ்தான் எல்லையிலும் இருக்கும் பாதுகாப்புகள் ஏனோ தமிழக கடலோர எல்லைகளில் இன்றைக்கும் இல்லை. சீனா,பாகிஸ்தான் இந்தியாவின் எதிரி நாடு, ஆனால் இலங்கை நம் நட்பு நாடு என பேசிக்கொண்டிருக்கும் இந்திய அரசாங்கத்திற்கு என்றைக்கு தெளியும் என்பது தெரியவில்லை. அல்லது அடிவாங்குவது தமிழன் என்பதால் இதை கண்டுகொள்ளாமல் இருக்கிறார்களா என்பதும் புரியவில்லை.
ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் தாக்கப்பட்டதற்கு தாவிக்குதித்த அரசாங்கம், தமிழர்கள் துண்டுதுண்டாக வெட்டப்பட்டு அவர்களின் சதைகள் கடலிலே வீசி எறியப்பட்டு மீன்களுக்கு உணவாக ஆக்கப்பட்டாலும் தன் கைகட்டி வாய்மூடி இருக்கிறதே! அது எதற்காக? ஒருவேளை ஹிந்தி பேசத்தெரிந்தவன் தாக்கப்பட்டால் மட்டும் தான் குரல்கொடுக்குமா? அப்படி அதுதான் உண்மையென்றால் கடைசித் தமிழனின் குரல்வளை நெரிக்கப்படும் வரை அவன் அம்மா என்று தமிழில் தானே அலறுவான். அந்தக்குரல் கடைசிவரை டெல்லியை எட்டாது போலும். ஏனென்றால் தமிழகத் தமிழனுக்கு மட்டுமல்ல, இலங்கைத் தமிழனுக்கும் கூட இந்தி தெரியாது. இந்தி தெரியாமல் நீயெல்லாம் எப்படி இந்தியனாவாய் என ஒவ்வொரு விமான நிலையங்களிலும் அவமானப் படுத்தப்பட்ட போதும் கூட தன் அக்மார்க் சிரிப்பை உதிர்த்துவிட்டு எருமைமாட்டில் மழைபெய்தது போல சென்றுவிடுவதால் தான் அவன் இன்றைக்கும் இளித்தவாயனாக பார்க்கப்படுகிறான்.
எத்தனை மீனவனின் இரத்தம் கடலிலே கொட்டப்பட்டாலும் நம் அரசு யாருக்கோ பயந்து கொண்டுதான் இருக்குமே தவிர ராஜபக்சே சகோதரர்களின் சட்டையைப் பிடித்து உலுக்காது. இந்தியாவின் மறைமுக எஜமானன் அமெரிக்காவே ஐநா குழுவை அனுமதித்காததை கண்டிக்கும் போது இந்தியா மட்டும் இன்னமும் கள்ள மௌனம் சாதித்துக் கொண்டு இருப்பது யாருக்கு பயந்து? இந்தியாவின் பரம எதிரியான பாகிஸ்தானை ஒன்டிக்கு ஒன்டி நேர்கலத்தில் எதிர்கொண்டு தாக்கி அழிக்கும் போது, தமிழகத்தின் ஒரு மாவட்ட அளவில் இருக்கும் இலங்கையை எதிர்ப்பதற்கு என்ன பலம் இல்லை இந்த திருநாட்டில்? ஆயுத பலமா? ஆள் பலமா? இப்படி அவன் செய்யும் தவறுகளைக் கண்டுகொள்ளாமல் இருப்பது நாளை நம் நாட்டிற்குத் தான் ஆபத்து என்பதை என்றைக்கு இந்த அரசு உணருமோ? தமிழக மீனவர்களின் உயிரையும் உடமையையும் வைத்து ஆடுபுலி ஆட்டம் ஆடும் சிங்கள் ராணுவ வெறியர்களிடமிருந்து தங்களின் உயிரை பாதுகாத்துக் கொள்ள தமிழக மீனவர்கள் ஆயுதமேந்த வேண்டுமோ?
கச்சத்தீவை தன் அப்பன் வீட்டுச்சொத்தாக நினைத்துக் கொண்டு பூர்வீகவாசிகளை அடித்தும், உதைத்தும்,கொலைசெய்தும், அவர்களின் சொத்துக்களை நாசமாக்கியும் தங்களது பணியைச் செய்து ஒத்திகை பார்த்துக் கொண்டிருக்கும் சிங்களவனை கண்டிக்க இந்தியாவிற்கு இன்னமும் நேரம் வரவில்லையா? சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்ட 25 ஆயிரம் கைதிகள் தயார் நிலையில் முள்ளிவாய்க்காலில்
முகாமிட்டு இருப்பதற்கு காரணம் என்ன என்று ராஜபக்சேவிடம் நம் அரசு கேள்வி கேட்டதா? வாய் இருந்தும் ஊமையாய் என்ற நிலையை அல்லவா கடைபிடிக்கிறது நம் அரசாங்கம். வரும் முன் காப்போம் என்ற நிலை இல்லாமல் இன்னமும் நட்புறவு பேண வேண்டுமென்கிற நிலையில் இருந்தால் அதற்கான விலை தமிழனின் இரத்தமும் சதையும் தான் தவிர வேறேதும் இல்லை. இதைத் தான் விரும்புகிறார்களா சம்பந்தப்பட்டவர்கள்? இன்றைக்கு அநியாயமாக ஒரு செல்லப்பனின் உயிர் பறிக்கப்பட்டு விட்டது. இன்னமும் எத்தனை செல்லப்பன்கள் உயிர்கொடுத்து சிங்கள ராணுவத்தின் இரத்தவெறியைத் தணிக்கப் போகிறார்களோ? இப்படியே திட்டமிட்டு தாக்கிக் கொண்டிருக்கும் இலங்கைக்கு, இங்கே தூதரகம் ஒரு கேடா?
இன்றைக்கு இரண்டு போராட்டங்கள். ஒன்று திதிமுக மீனவர் அணி சார்பில் இலங்கையின் அராஜகப்போக்கை கண்டித்து ஒரு ஆர்ப்பாட்டமும், ஐநா குழுவை இலங்கைக்கு வரக்கூடாது என்று சொல்லும் சீனா மற்றும் ரஷ்யாவின் இழிநிலையை கண்டித்தும், சீனக்கைதிகள் 25 ஆயிரம் பேரை முள்ளிவாய்க்காலில் குடியமர்த்தியுள்ள இலங்கையை எச்சரித்தும் எழுச்சித் தமிழன் சீமான் நடத்தக்கூடிய மாபெறும் ஆர்ப்பாட்டமும் நடைபெறுகிறது. இதுபோல சிறுசிறு குழுக்களாக நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் எந்தபயனையும் தந்துவிடப்போவதில்லை. என்றைக்கு தமிழினம் மொத்தமும் ஓரணியில் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்துகிறதோ அன்றைக்குத் தான் இந்திய அரசாங்கம் மட்டுமின்றி இலங்கை அரசாங்கத்தின் அஸ்திவாரமும் ஆட்டம் காணும்.
already seen this





வெறும் கண்டனத்துக்குரியதுன்னு சொல்லிட்டு காசை நீட்டினாப் போச்சுன்னு அரசு இருக்கும் வரை....என்னைக்கோ சிங்களவன் மெரினா பீச்சுக்குள்ள வர வரைக்கும் உறைக்காது போல:)
//வானம்பாடிகள் said... July 11, 2010 12:38 PM
வெறும் கண்டனத்துக்குரியதுன்னு சொல்லிட்டு காசை நீட்டினாப் போச்சுன்னு அரசு இருக்கும் வரை....என்னைக்கோ சிங்களவன் மெரினா பீச்சுக்குள்ள வர வரைக்கும் உறைக்காது போல:)//
கருத்துக்கு நன்றியண்ணே! தொடர்ந்து வாங்க..